கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.
அழகியல்பற்றிய வகையீட்டில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” எனக் கூறப்பட்ட வகைப்பாடானது மாற்றப்பட்டு, இன்று நூற்றுக்கு மேற்பட்டவையாக வகையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்றத்தின் அதிகரிப்பினால் மனித மனம் ஆறுதல் அடைகின்றது என உளவியலாளர் கூறுகின்றார். ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் மனச்சுமையால் கட்டுண்டு கிடக்கின்றான். இந்நிலையில் கலைகளின் வகையீட்டின் அதிகரிப்பானது, மனச்சுமைகளைக் குறைப்பதற்கு ஏற்ற களமாக அமைகின்றது என்ற கருத்தினை சிக்மன் புறொய்ட் என்ற உளவியலாளரும் ஆதரித்துச் செல்கின்றார். இக் கருத்துக்களின் முக்கிய செல்வாக்கானது அரிஸ்ரோட்டிலின் உளவியலின் அடிப்படையான “கதாசிஸ்” என்ற கொள்கையிலிருந்து உருவாக்கம் பெற்றிருக்கின்றது. கதாசிஸ் என்பதன் பொருள் உணர்வு வெளியேற்றம் ஆகும். அந்த உணர்வு வெளியேற்றம் இன்பவியலாக அல்லது துன்பவியலாக அமையலாம் எனக் கூறுகின்றார். உதாரணமாக ஓர் நாடகத்தினை நாம் பார்க்கின்றபோது எம்முடைழய மனங்களில் ஆனந்தம் பொங்கிச் சிரிப்போடு சேர்ந்த ஓர் வகையான உணர்ச்சி வெளியேற்றம் நடைபெறும். அதேபோல அந்நாடகத்தில் எமது மனதினைப் பாதிக்கின்ற சம்பவங்கள் காட்சிகளாக வருகின்றபோது எம்மை அறியாமலே எமது மனதில் ஏற்படுகின்ற கழிவிரக்கத்தினால் வாய்விட்டு அழுகின்றபோது மனதில் இருக்கும் துன்பச் சுமையானது குறைக்கப்படும். இவ்வாறான செயற்பாட்டின்மூலம் நாம் எமது மனதிலுள்ள பாரச்சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற ஓர் வாய்ப்பினை இக்கலைகள் உருவாக்குகின்றன. ஓர் படைப்பாளியைப் பொறுத்தவரையில் அதாவது, கலைதனைப் பொறுத்தவரையில் எவ்பொழுதும் அவருடைய மன நிலையினை வெளிப்படுத்தக்கூடியவாறே கலைப் படைப்புக்கள் காணப்படும். பெரும்பாலான கலைஞர்கள் தமது மனங்களில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்காகக் கவிதை, பாட்டு, நடனம், ஓவியம் என்று பல்வேறுபட்ட சிறப்பாற்றல்களைக் கலையின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு கலை என்பது மனித மனங்களிலுள்ள பல்வேறுபட்ட உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற காரணியாக அமைகின்றது.
மேலும், எம்முடைய மனங்களில் உள்ள துன்பச்சுமைகளைப் போக்குவதற்காகவே கோயிலுக்குச் செல்கின்றோம். இவ்வாறான செய்கையினை உளவியல் கண்கொண்டு நோக்குகின்ற உளவியலாளர்கள், நாம் கோயிலுக்குச் சென்றவுடன், கடவுளை எமது மனதில் இருத்துவதற்கும், அவ்வாறானதொரு பக்தியை எங்கள் மனங்களில் எழுவதற்கும், அங்கே கடவுள் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிற்பங்கள் உணர்வினை ஊட்டுகின்றன. மேலும், அதனை நாம் இரு கரம் கூப்பித் தொழுவதற்கு அந்தச் சிற்பக்கலையில் இருக்கின்ற பூரணமான கலை அம்சமே முக்கிய காரணமாக அமைகின்றது. இதனாலே நாம் கோயிலுக்குச் செல்வதால் மனநிலையில் ஒருமைப்பாடு ஏற்பட்டு, எமது மனக்குறைகள் நீங்குதல் சமய உளவியல் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமன்றி “கலைகள் பண்பாட்டு ரீதியாக மனிதனை வளம்படுத்துபவை”. ஏனெனில், ஒவ்வொரு காலங்களிலும் கலைகளின் தேவைகள் நன்கு உணரப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்றாற்போல், கலைஞர்கள் கலைகளைப் படைக்கின்றனர். இதனாலே ஒவ்வோர் கலைகளையும் நாம் எடுத்து நோக்கினால், அந்தக் கலைகளின் இயல்புக்கள் அன்றைய காலவோட்டத்தின் தன்மையினையும், மக்களின் பண்பாட்டியல் முறைமைகளையும் நன்கு தெளிவுபடுத்தக்கூடியதாக அமைகின்றது. உதாரணமாக மாக்சியனுடைய காலத்தில் எழுந்த கலைகள் எல்லாம் அன்றைய பொளாதாரப் பிரச்சனைகளையும், வகுப்புப் போராட்டங்களின் இயல்பினையும் பிரதிபலிப்பதாகவே காணப்பட்டன. அதுமட்டுமன்றி, எமது ஈழத்து மரபுகளில் இன்னும்கூட தெருக்கூத்துக்கள் என்பவை மக்களுடைய பிரச்சனைகளை வெளியில் கொண்டுவருவதற்காகத் தெருவில் கலைஞர்கள் குழுவாக ஒன்றுசேர்ந்து பாடல்கள் மூலமோ அல்லது கதைகள்மூலமோ குறித்துக் குதித்து ஆடிக் கருத்தினை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான மரபுகளை ஈழத்தில் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி, 1990ம் ஆண்டு காலப் பகுதிகளில் ஈழப் போராட்ட விடுதலைப் போக்கினை மையப்படுத்தி நெறியாள்கை செய்யப்பட்ட மண் சுமந்த மேனியர், அன்னை இட்ட தீ போன்ற நாடகங்கள் போராட்ட வரலாற்றில் முக்கிய தடம் பதித்ததோடு இவைகள் அக்காலத்தின் போராட்ட உணர்வுகளை காலத்தின் கண்ணாடியாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தன என்பதில் ஜயமில்லை.
அந்த நிலையில் கலைகளைப் பொறுத்தவரை எந்த மொழி, இன வேறுபாடுகளுமின்றி ரசிக்கக்கூடியதும் மன உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதுமே கலையின் பொதுவான இயல்பு என டாக்டர். ராதாகிருஷ்ணர் கூறுகின்றார். இவருடைய உளவியல் கருத்தினை யதார்த்தத்துடன் இணைந்து நோக்குகின்றபோது எந்த மொழிப் பாடல்களாய் இருந்தாலும் சரி, அம்மொழிகளை நாம் விளங்கிக் கொள்ளாவிட்டாலும், மனதினைச் சென்றடைகின்ற இசையினைப் பொறுத்தே நாம் அதனைச் சுவைக்கிள்றோம். இதனால், கலை என்பது பண்பாடு கடந்த ஓர் பொது மொழியாக விளங்குவதால், அதுவே கலையின் மிகப் பெரிய வெற்றியாகும். அத்தோடு, இது கலைஞனின் உணர்வு ரீதியான திறமையாகும்.
அருமை
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteநெகிழ்ந்தேன்......
ReplyDeleteAwesome
ReplyDelete